மொழி : English / தமிழ்

ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

நான் எனது என்ற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன் ஞானி என்பதற்கொப்ப வாழ்ந்த ஓம் ஶ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள் வரலாறு இங்கே தரப்படுகின்றது. இவ்வரலாறு அவர் கூற்றிலிருந்தும், அவர் குறித்து அறிந்தவர்கள் கூறியவற்றிலிருந்தும், தொகுக்கப்பெற்றவை.

தவத்திரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கருவூர் கோட்டை ஜமீன் பரம்பரையில் 1859ம் ஆண்டு சித்திரை திங்கள் 28ம் நாள் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார்.

சுவாமிகளுக்கு ஐந்து மாதமாகையில் அவரின் பாட்டன் எனது பேரன் உலகத்தை ராஜபரிபாலனம் செய்வான் என்று கணித்து வைத்தார். சுவாமிக்கு, எட்டு மாதமாகையி்ல் யாரோ ஒருவர் பைத்தியக்காரர் போல் வந்து பசிக்கிறது என்று கேட்டார் சுவாமிகளின் தாய் ஐயோ! யாரோ பசிக்குது என்கிறார்களே அவருக்கு பசியாற்றுங்கள் என்றார். அவர் ஆகாரம் சாப்பிட்டு விட்டு ஊஞ்சலில் ஆடும் குழந்தையை (சுவாமிகளை) பார்த்து இது ஆண்டவன் குழந்தை என்று சொல்லி விட்டு மாயமாய் மறைந்தார். துழவி! துழவி! பார்த்தார்கள் காணவில்லை. இது நடந்த மூன்றாம் நாள் சுவாமிகளின் தாய் ஒரு பயங்கரமான கனவு கண்டார். அந்த கனவை மாமனாரிடம் சொல்கையில் "நீ ஒரு சிறிய குழந்தையம்மா" உன் கனவு பலித்தால் ஒரு வாரத்திற்குள் துயரமான செய்தி வரும் என்று சொன்னார். மறுநாள் நெய்விட்டு சாதம் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டவுடன் சுவாமிகளின் தாய் திரிலோகத்தை விட்டு பரலோகம் சென்றடைந்தார்.

02 About

குழந்தையின் தகப்பன் தனக்கு மறுமணம் தேவையில்லை "என் மனைவி போல் மற்றவள் இருக்க மாட்டாள்" என்று சொல்லி விட்டு நிறைய தர்மங்கள் செய்து வந்தார்.

சுவாமியின் எட்டாவது மாதத்தில், அவரின் சித்தப்பாவிற்கும் பெண் குழந்தை பிறந்து பதிமூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவரின் சித்தி தன் குழந்தையைப் பெரிதன எண்ணாமல் எட்டு மாதக் குழந்தையையே பேணி வளர்த்தாள்.

சுவாமிகளுக்கு 3 வயது ஆகும் போது பாட்டன் தன்னுடைய அந்திம காலம் வருடம், மாதம், நாள், நாழிகை, நிமிடம், திதி ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் குறித்து வைத்து விட்டு உறவினர்கள் அனைவரையும் அழைத்தார்.

ஏன் அழைத்தீர்கள்? என்று அவர்கள் கேட்க சிரித்து விட்டு ‘நீங்கள் நாளை காலை போகலாம்’ என்று சொன்னார். 10.30 மணியளவில் பாலை இரண்டாவது முறை குடித்து விட்டு படுத்தார். 12 மணியளவில் திரிலோகத்தை விட்டு பரலோகம் சென்றடைந்தார். இது குறித்து சுவாமிகளக்கு அப்போது ஏதும் தெரியாது.

சுவாமிகளுக்கு ஆறு வயது ஆகும் பொழுது ஒரு நன்செய்நிலத்தில் 6½ காணி நிலம் எழுதி வைத்து விட்டு ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்பிக்கச் சொன்னார்கள். ஒரு நாள் காலை வாத்தியார் தன் மடியில் குழந்தையை அமர்த்தி விரல்களைப் பிடித்து அ, ஆ எழுத சொன்னார். மதியம் குழந்தை வாத்தியாரை பார்த்து "நான் சொல்வது போல் நீ எழுது" என்றார். "தப்பப்பா" என்றார் வாத்தியார். அதற்கு சுவாமிகள் ‘’ நீ யார் என்னை தப்பு என்று சொல்வதற்கு’’ என்று கேட்டு வாத்தியாரை கன்னத்தில் அடித்து விட்டார். நீ என்ன எனக்கு சொல்லி கொடுப்பது என்று கூறி எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவாமிகளுக்கு பதினைந்தாவது வயது முடிந்து 16ம் நாள் சுவாமிகளின் தகப்பன் தன்னுடைய ஆவி பிரியும் அந்திம காலம் வருடம், மாதம், நாள், நாழிகை, நிமிடம், திதி (அப்பா எழுதியது போல்) யாருக்கும் தெரியாமல் குறித்து வைத்து விட்டு தமைக்கையிடம் (குழந்தையின் அத்தை) உறவினர்களை கூப்பிட்டுவரச்சொல்லி ஆள் அனுப்புங்கள் என்றார். சுற்றத்தார் நூற்றுக்கணக்கானவர் வந்து ஏன் எங்களை அழைத்தீர்கள்? என்று கேட்க ஒன்றும் இல்லை குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என மனக்கலக்கத்துடன் கேட்க ஒன்றுமில்லை என்று சிரித்து ‘’நாளை நீங்கள் போகலாம்’’ என்றார்.

மறுநாள் காலையில் எல்லோரும் டிபன் சாப்பிட்டனர். தாயுடன் பிறந்தவர் (மாமா) கட்டிலிலும், ஆண்கள் ஈஸி சேரிலும், பெண்கள் கீழே பாயிலும் உட்கார்ந்திருந்து வெற்றிலைப்பாக்கு போட்டு கொண்டு இருந்தார்கள். கூட்டம் ஹாலில் நிறைந்து இருந்தது. சித்தப்பன் மேல் உட்கார்ந்திருந்த சுவாமிகளை தகப்பன் கூப்பிட்டார். (எப்போதும் கூப்பிடுவார் முத்தம் கொடுப்பார்) சுவாமிகளை தன் மடி மீது அமர்த்தி முத்தமிட்டு நான் திரிலோகத்தை விட்டு பரலோகம் சேரப்போகிறேன் நீயும் சில காலம் திரிலோகத்தை விட்டு பரலோகம் சேருவாய் என்றார். சுவாமிகள் திரும்ப வந்து சித்தப்பன் மீது அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் தகப்பனுக்கு முகம் வியர்த்தது. அத்தை தகப்பனிடம், நீ வெற்றிலைப்பாக்கு போடும் போது சொத்தை பாக்கை போட்டு மென்று விட்டாய். அதனால் தான் வேர்க்கிறது. வாய் கொப்பளித்து விட்டு ஒரு வாய் காபி குடி என்றார். எனக்கு ஒன்றும் இல்லை எல்லோரும் காபி குடியுங்கள் என்றார். நம் வீட்டில் எப்போதும் தவலையில் காபி காய்ந்து கொண்டிருக்கும், நீ முதலில் வாய் கொப்பளித்து விட்டு காபி குடி என்றார். காபி வாங்கி குடித்தார் பத்து நிமிடத்துக்குள் கீழே சாய்ந்தார். ஒரு மணி நேரத்தில் உயிர் பிரிந்தது. அப்போது சுவாமியை தூக்கி வைத்து தாயும் இல்லை, தகப்பனும் இல்லை என்று எல்லோரும் அழுதார்கள். அப்போதுதான் சுவாமிக்கு விவரம் தெரிந்தது. அதற்கு முன் எதுவும் தெரியாது. தகப்பனை தகப்பன் என்று தெரியாது, பெரியப்பன் என்று நினைத்திருந்தார். அதுவரையில் தாய் யார்? தந்தை யார்? என்றறியாமல் வளர்ந்த குழந்தைக்கு அப்பொழுது தான் தன்னைப் பெற்றவர்கள் யார் என்றே தெரியவந்தது. அதற்கு முன் சித்தப்பாவைத் தகப்பன் என்றும், சித்தியைத் தாய் என்றும் அத்தையைப் பெரியம்மா என்றும் நினைத்திருந்தது.

அன்று முதல் 26ம் நாள் வரை குழந்தை, என் தாய் எங்கே? என் தந்தை எங்கே? இது நாள் வரை ஏன் யாரும் சொல்லவில்லை? என்று அழுது கொண்டும், தண்ணீர் அருந்தாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்தது. மக்கள் அனைவரும் அழுது கொண்டு சமாதானப் படுத்த முயன்றனர் முடியவில்லை. 27ம் நாள் 6 வாசற்படி கடந்து பூஜை அறைக்கு சென்றார். பூஜை அறையில் பெருமாள், முருகன் படங்கள் இருந்தது. என் தாய் எங்கே? என் தந்தை எங்கே? என்று அங்கே உள்ள படங்களை பார்த்து கேட்டு அழுதார். கோபத்துடன் படங்களை பிடுங்கி எறிந்தார். இனி இங்கே இருக்க கூடாது என்று எண்ணினார்.

அங்கு பெரிய இரும்பு பீரோ இருந்தது. அதை சாவி மூலம் திறக்க முயன்றார், திறக்க தெரியவில்லை. அருகே உள்ள ஸ்டுலின் மேல் ஏறி பீரோவின் மேல் கைவைத்து துழாவினார் 30 வெள்ளி காசுகள் (அப்போது நோட்டு கிடையாது) தகப்பன் போட்டிருந்த செயின், மோதிரம், காப்பு, சுவாமி போட்டிருந்த செயின், மோதிரம், காப்பு இருந்தது. அதை எல்லாம் எடுத்து துணியில் சுற்றி மேலே போட்டு இருந்த பட்டு வஸ்திரத்தில் மறைத்து வைத்தார். அப்பொழுது, எப்போதும் பசி தெரியாத குழந்தைக்கு, மறைத்து வைத்தவுடன் பசி தெரிந்தது. வெளியே வந்து அம்மா பசிக்கிறது என்றார். அத்தை, பெரியம்மா, சித்தி மூன்று பேரும் நெய் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் என்று ஆளுக்கு ஒரு வாய் ஊட்டினார்கள். இன்று தான் ஆகாரம் குழந்தைக்கு இறங்கியது என்று எண்ணி சந்தோஷப்பட்டு ஊஞ்சலில் வைத்து ஆட்டினார்கள். ‘’நான் தூங்குகிறேன் நீங்கள் போய் குளித்து விட்டு சாப்பிடுங்கள்’’ என்று சுவாமி கூறினார். அவர்களும் அப்படியே செய்தார்கள்.

அப்பொழுது யாருக்கும் தெரியாமல் வெளியே 1 கி.மீ தூரம் நடந்து சென்றார். அப்போது ரோடு கிடையாது, பஸ் கிடையாது. 10-12 பேர் பாய் போட்டு உட்காரும் சிறிய அளவு கரியில் லொடக், லொடக் என்று ஓடும் வண்டி வந்தது. அந்த வண்டி பழனி செல்லும் வண்டி. எனக்கு ஒரு அட்டை (டிக்கெட்) கொடு என்று சுவாமி கேட்டார். நீ ஜமீன் வீட்டு பிள்ளை உனக்கு எதற்கு அட்டை என்று வண்டிக்காரர் கூறினார். ஜமீன் வீட்டில் எல்லோரும் பழனி சென்றிருப்பார்கள், அவர்களிடம் குழந்தையை சேர்ப்பித்து விடலாம் என்று எண்ணி வண்டியில் அழைத்து சென்றார். பழனி சென்றவுடன் வண்டிக்காரர் குழந்தையின் சுற்றத்தாரை தேடினார். அப்போது சுவாமி ஓடி மறைந்து கொண்டார். குடும்பத்தாரையும் காணவில்லை குழந்தையையும் காணவில்லை. நாம் ஊருக்கு திரும்பி சென்று குடும்பத்தாரிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்து வண்டியை ஊருக்கு திருப்பினார்.

வண்டி சென்ற பிறகு சுவாமி அருகில் உள்ள தேங்காய் பழக்கடைக்கு சென்றார். தேங்காய் கொடு என்றார், கடைக்காரர் எவ்வளவு என்று கேட்க? ஐந்து வெள்ளி காசுக்கு கொடு என்றார். ஒரு பெரிய கூடையில் சகலமனைத்தும் நிறைய வைத்து, கூடையை தூக்க ஒரு ஆளை உடன் அனுப்பினான். எல்லோரும் காலணாவிற்கு அபிஷேக டிக்கெட் கியூவில் நின்று வாங்கி கொண்டிருந்தார்கள்.

அப்போது அபிஷேக டிக்கெட் விலை காலணா. சுவாமிகள் டிக்கட் வாங்கவில்லை. அந்த காலத்தில் பூசாரி, ஐயர் எல்லாம் கிடையாது. பூஜை செய்பவர் டிக்கட் எங்கே என்று கேட்டார். கூடையை தூக்கிவந்த ஆள், திட்டப்போகிறார்கள் என்று பயந்து எட்டப் போய் நின்று விட்டான். சுவாமிகள் தட்டை, முதலில் எடுத்து சென்று பூஜை செய்து வந்து கொடுத்தார். எல்லோருக்கும் தேங்காயை உடைத்து கொடுங்கள் என்று சுவாமிகள் கூறினார். அவர் தேங்காயை எல்லோருக்கும் உடைத்து கொடுத்தார். சுவாமி ஐந்து வெள்ளி காசுக்கு சில்லறை கொடு என்றார். காலணா எடுத்து கொண்டு மீதியை கொடுத்தார். சுவாமிகள் கூடையை தூக்கி வந்த ஆளுக்கு காலணா கொடுத்தார். அந்த ஆள் நான்கு நாள் சாப்பிட கூலி கொடுத்தார் என்று சுவாமியை இடம்புரி, வலம்புரி சுற்றி கும்பிட்டார்.

சுவாமிகள் ஏழைகளுக்கும் சாமியார்களுக்கும் சில்லரையை போட்டு கொண்டே மலையை விட்டு கீழே இறங்கினார். சில்லரை காசும் தீர்ந்து விட்டது, ஏழைகளும் கண்ணில் தென்படவில்லை. அழுதுகொண்டே கீழே இறங்கினார், வழி வேறு தெரியவில்லை. வெகுதூரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு வந்து அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். அப்போது துணி இல்லாமல் ஒரு ஜீவன் வந்தார் (அழுக்கு சுவாமிகள்). அவர் சுவாமிகளை கட்டிபிடித்து, உன் ஊர் எது? தாய், தந்தை யார்? என்று கேட்டார். சுவாமிகள் எனக்கு ஊரும் இல்லை, பேரும் இல்லை, தாயும் இல்லை, தந்தையும் இல்லை என்று பயந்து கொண்டே கூறினார்.

நெஞ்சை தடவி கொடுத்து பயப்படாதே எங்கே போகிறாய்? என்று கேட்டார். அதற்கு சுவாமிகள் எனது தாய் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார். உனது தாய் தந்தை இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றார் அழுக்குசுவாமிகள். அப்பொழுது தான் முதன்முதலில் ரயில் சின்ன பெட்டி போட்டு ரயில் தடம் சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். அந்த சின்ன ரயில் பெட்டியி்ல் இருவரும் பயணம் செய்தனர். என்னிடம் காசு இருக்கிறது என்று சுவாமிகள் கூறினார். உனக்கும் எனக்கும் காசு எதற்கு என்றார் அழுக்குசுவாமிகள். வண்டி கிளம்பியது. வண்டி ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றவுடன் நின்று விட்டது. தண்டவாளமும் அதுவரைதான் இருந்து. அந்த இடத்தை விட்டு இறங்கி குழந்தையை (சுவாமிகளை) அழைத்து கொண்டு மலைமேல் மூன்று நாள் நடத்தி அழைத்து சென்றார். அந்த மலைமேல் உள்ள குகைக்குள் வா! வா! என்று கூப்பிட்டார், எனக்கு பயமாக இருக்கிறது நான் உள்ளே வரவில்லை என்று சுவாமிகள் கூறினார்.

அவர் குகைக்குள் சென்று ஒரு காட்டாரியையும் ஏட்டு சுவடிகளையும் எடுத்து வந்து ‘’இதைப்படி’’ என்று சொன்னார். இது எல்லாம் எனக்கு எதற்கடா? தாய் தகப்பனாரை காட்டுடா என்று சுவாமிகள் கூறினார். இதில் தான் உன் தாய் தகப்பனார் இருக்கிறார்கள் படி என்று சொன்னார். சுவாமிகள் எனக்கு படிக்க தெரியாது என்றார். இரண்டு நாள் இப்படி சொல் என்று சொல்லி கொடுத்தார், மூன்றாம் நாள் இது விற்பதும் அல்ல வாங்குவதும் அல்ல இது அறியாத மொழி புரியாத கரங்கள் உனக்கு தன்னாலே தெரியும் என்றார். ‘’இது எல்லாம் எனக்கு எதுக்கடா’’ என்று சொல்லி வீசி எறிந்துவிட்டு என் தாய் தகப்பனாரை காட்டுடா என்று சொல்லி விட்டு ஒரு பாறையின் மேல் உண்ணாமலும் உறங்காமலும் சுவாமிகள் படுத்து இருந்தார். பதினெட்டாம் நாள் ஒரு சிறு குழந்தையை போல் வந்து வீசி எறிந்ததை எடுத்து கையில் வைத்தார். தெம்பில்லாமல் இருந்த குழந்தைக்கு சாப்பிட்டது போல் தெம்பு வந்தது. நாம் என்ன சாப்பிட்டோம் என்று சுவாமிகள் எண்ணினார்.

தன் உள்ளத்தை உற்று பார்த்தார் உள்ளத்தில் காற்று, நீர், நெருப்பு மூன்றும் தெரிந்தது. படுத்து இருந்த சுவாமிகளுக்கு உனக்குத்தான் அப்பன் கொண்டு வந்து கொடுத்தார் என்று சொல்லி அந்த பெரியவர் முகத்தை துடைத்தார். இப்படி வேண்டாம் என்று திட்டினாலும் அடித்தாலும் காய், கனிகளை கொண்டு வந்து ஊட்டி வளர்த்தினார் அழுக்கு சுவாமிகள். ஒரு நாள் "நீ கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை" உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் அழுக்கு சுவாமிகள். என்னை ஏன் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்று சொல்கிறாய் என்று கேட்டு தன்னிடமுள்ள மோதிரம், செயின், காப்பு எல்லாவற்றையும் கழட்டி மலைமேல் இருந்து வீசி எறிந்தார். உனக்கு ஒன்றும் வேண்டாமா என்று மூன்று முறை அழுக்கு சுவாமிகள் கேட்க, ஒன்றும் வேண்டாம் என்று சுவாமிகள் கூறினார்.

அதற்கு அழுக்கு சுவாமிகள் உன் பெரியவர்கள் செய்த புண்ணியத்தால் அவர்கள் உன்னை பார்க்கத்தான் வேண்டும், நீ நாட்டுக்கு நல்லது செய்யத்தான் வேண்டும், என்று சொன்னார். அதற்கு சுவாமிகள் நான் ஏன் ஒரு முறை அவர்களை பார்க்க போகிறேன். நான் ஏன் நாட்டுக்கு நல்லது செய்ய போகிறேன். நான் சாகத்தான் போகிறேன் என்று கூறி அழுக்கு சுவாமிகளை கல்லால் அடித்தார். கல்லால் அடித்ததை வாங்கி கொண்டு உனக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை நீ சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அழுக்கு சுவாமிகள் கூறினார். கல்லால் அடித்தாலும் உதைத்தாலும் அவர் காய்கனிகளை கொண்டு வந்து ஊட்டி சில காலம் அடியும் வாங்கி கொண்டு சுவாமிகளை வளர்த்தார் அழுக்கு சுவாமிகள். சில காலத்திற்கு பிறகு, நாம் அடித்தாலும் நமக்கு காய், கனிகளை கொடுத்து வளர்த்தார். நாம் அவர்களை கும்பிடலாம் என்று நினைத்து எழுந்தார் சுவாமிகள்.

உன்னிடம் தான் கடவுள் இருக்கிறார் என்று சொல்லி, நான் உன்னைத்தான் கும்பிடவேண்டும் என்று கும்பிட விடாமல் ஊட்டி வளர்த்தினார் அழுக்கு சுவாமிகள். சில காலத்திற்கு பிறகு எனக்கு வேட்டி கட்டி விடுகிறாய், நீ ஏன் துணி இல்லாமல் இருக்கிறாய்? என்று சுவாமிகள் அழுக்கு சுவாமிகளை கேட்டார். அதற்கு அவர் உண்பேன் அப்பா, உறங்கினேன் அப்பா. மக்களுக்கு நன்மை செய்தேன் அப்பா. அந்த நன்மை எல்லாம் தீமை என்று சொன்னார்கள் அப்பா. அதை ஒரு சிலர் நன்மை என்று சொன்னார்கள் அப்பா. மேலும் என் மேல் பொறாமை பட்டு மூவரை என்னை கொல்வதற்கு அனுப்பினார்கள். அந்த மூவரும் என் முகத்தை பார்த்துவிட்டு, அவர்களின் பேச்சை கேட்டு உங்களை கொல்ல வந்தோமே என்று கூறி கலங்கி அழுதார்கள். என்னை கொன்று விட்டேன் என்று சொல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, நான் யார் கண்ணிலும் படாமல் உண்ணாமலும் உறங்காமலும் ஆடையற்று திரிந்தேன் அப்பா சிலகாலம். ஒரு நாள் பசி வந்தது அப்பா, ஒரு உத்தமன் வீட்டில் பசிக்குது என்று கேட்டேன் அப்பா, பைத்தியக்காரன் உள்ளே வந்தான் என்று வெளியே உள்ள கல் தூணில் கட்டி விட்டு உள்ளே சாப்பிட்டு விட்டு வெளியில் இருப்பவருக்கும் சாப்பிட கொடுத்து கட்டை அவிழ்த்து விடலாம் என்று வந்தான். வந்தவனுக்கு சரீரம் நிறைய இடத்தில் இருப்பது போல் அவனுக்கு காட்சி தெரிந்தது ஐயோ! பாவம் செய்து விட்டேனே என்று கதறினான். மீண்டும் பார்க்கும் போது கட்டி இருப்பது போல அப்பன் காட்சி கொடுத்தார். கட்டை அவிழ்த்துவிட்டு காலில் விழுந்து என்னை மன்னியுங்கள் என்று மன்றாடி கேட்டான். ஆகாரம் சாப்பிடுங்கள் என்றான். உன்னிடம் சாப்பிட வரவில்லை என்னுடைய அப்பன் உன்னிடத்தில் காட்சி தர கட்டளை இட்டான் அப்பா என்றேன். போன இடமெல்லாம் பின்னால் தொடர்ந்து வந்து அழுதான் அப்பா. ஐந்தாம் நாள் நான் உட்காரும் இடத்தில் கற்களால் கட்டி கும்பிடலாம் என்று கற்களை கொண்டு வந்து போட்டான் அப்பா. அப்போது அவனை கூப்பிட்டு, நீ ஒரு தவறும் செய்யவில்லை. நீ என்ன நினைத்தாயோ அதன்படி செய். உன்னுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னேன் அப்பா. என்னுடைய சரீரம் சாப்பிடாமல் ஐந்து வருடங்கள் ஆனாலும் வாடாது. ஆனால், உன் சரீரம் ஐந்து நாளுக்குள் வாடி வதங்கி விட்டது என்று சொன்னேன் அப்பா. பிறகு அவன் ஒரு மாதத்திற்குள் சிறு கோயில் கட்டி, அங்கு நூறு பேருக்கு ஆகாரம் அளித்து என்னை அழைத்து மூன்று கை சாப்பிட வைத்தான் அப்பா. நீங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும் என்று காலை பிடித்து அழுதான் அப்பா.

உன் அன்புக்கு நான் கட்டுப்பட்டு உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு, பத்து நாட்கள் கழித்து அவனுக்கு தெரியாமல் அப்பன் சந்நிதிக்கு வந்தேன் அப்பா. சந்நிதிக்கு வந்து என் குறைகள் எல்லாம் உன்னிடம் ஒப்படைத்து ஊட்டி வளர்த்தேன் அப்பா. சிறிது காலம் அந்த உத்தமன் என்னை தேடி பார்த்து விட்டு கோயிலில் உள்ளுக்குள் தான் இருக்கிறேன் என்று நினைத்து கோயிலை வலம் வந்து கொண்டு இருக்கிறான் அப்பா. அந்த இடத்திற்கு போகலாம் என்று சுவாமிகளை அழைத்து கொண்டு அழுக்கு சுவாமிகள் சென்றார். அந்த உத்தமனும் மற்றவர்களும் அழுக்கு சுவாமிகளை பார்த்துவிட்டு, உயிரோடுதான் உள்ளார் என்று சந்தோஷப்பட்டு சுற்றி வந்து கும்பிட்டார்கள். குழந்தை தான் கடவுள், அவரை கும்பிடுங்கள் என்றார்.

அவர்கள் குழந்தையை கும்பிடவும், என்னை ஏன் கும்பிடுகிறீர்கள் என்று குழந்தை (சுவாமிகள்) கல்லால் அடித்தது. இப்படி இருக்கையில் ஒரு அம்மாவிடம் அடியே அலமேலு இந்த இடத்தில வில்வ கன்றும் விளாங்கன்னும் வையடி என்று சொன்னார். "ஐயோ அவன் ரவுடி இந்த இடமெல்லாம் அவனுடையது என்று சொல்கிறான்’’ என்று சொன்னார் அந்த அம்மா. இல்லை இந்த இடமெல்லாம் உனக்குத்தான் ஆகும் என்றார். அந்த ரவுடி ‘’எந்த கலெக்டர் என்றாலும், மகான் என்றாலும் என் முன்னால் கை கட்டி இருக்க இடம் கேட்டால் கூட நிற்கக்கூட இடம் கொடுக்க மாட்டேன் என்றான். இதை கேள்விப்பட்டு அவர் ‘’விளா மரமும் வில்வ மரமும் வை’’ என்று மறுபடியும் சொன்னார். சொல்லி போகையில், ரவுடியின் தாயும் பாட்டியும் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்டார்கள். எங்களை கும்பிட்டதால் காலையில் இருந்து மாலை வரை நிற்காமல் சுற்றிவரும் இடமெல்லாம் உங்களுக்கு சொந்தம் என்று சொல்லி, நிற்க இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவனின் குடும்பம் பூண்டற்று போகும் என்று சொல்லிவிட்டார்கள். கொஞ்ச நாளில் அவன் கெட்டு அந்த அலமேலு அம்மாவிடம் ஐந்து, பத்து என்று ஏக்கருக்கு குறைத்து விற்று விட்டான்.

அதே இடத்தில் அங்கேயே நான் சமாதி அடைகிறேன் என்று கல் மேடையில் இந்த வருடம், இந்த மாதம், நாழிகை, நிமிடம் என்று கல்லில் எழுதி வைத்தார். உங்களை கும்பிட சின்னம் இல்லையே என்று சாது சாமிகளும் மற்றவர்களும் கேட்க, ஒரு தரம் படம் எடுங்கள் என்று சொன்னார். படம் எடுத்ததில், இரண்டுதான் விழுந்தது. அவருடைய படம் தெளிவாக தெரியவில்லை, குழந்தை மார்பு மேல் கை போட்டு இருந்த படம் தெளிவாக தெரிந்தது.

குழந்தை தான் கடவுள் என்று சொல்லி, நான் சமாதி அடைவேன் குழந்தை சில காலம் நான் சமாதி ஆனவுடன் மனித சஞ்சாரம் இல்லாத இடம் செல்லவும் என்று கல்லில் எழுதி வைத்தார். குழந்தைதான் எல்லாவற்றிக்கும் கடவுள் என்று சொன்னார்.

குழந்தையை கும்பிடப்போனால் குழந்தை "என்னை ஏன் கும்பிடுகிறீர்கள்" என்று கல்லால் அடித்தது. சமாதிக்குள் போய் உட்கார்ந்தார் அழுக்குசுவாமிகள். உட்கார்ந்த அரைமணி நேரத்திற்குள் அனல் போல் தோணப்பட்டது. போய் பார்கையில், உட்கார்ந்த நிலையில் இருந்த அழுக்குசுவாமிகளிடம் ஆத்மா இல்லை என்று எல்லோரும் அழத் தொடங்கினார்கள். நம்மை விட்டு இவரும் போய் விட்டாரே என்று குழந்தை ஓடத் தொடங்கியது.

எல்லோரும் பிடித்து சமாதானம் பண்ணி அழைத்து மூன்றாம் நாள் சமாதி வேலையை பூர்த்தி செய்தார்கள். அன்று யாருக்கும் தெரியாமல் குழந்தை கன்னியாகுமரி மலை நோக்கி சென்றது. அங்கு எண்பத்தி ஐந்து வயது பெரியவர் உட்கார்ந்த நிலையில் இருந்தார். அவருக்கு தினமும் பனிரெண்டு மணிக்கு ஒரு செம்பு பால், பழம் கொண்டு வந்து வைப்பார்கள். இந்த குழந்தை ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறதே என்று பாலைக் கொடுத்தார். "எனக்கு ஏண்டா பாலை கொடுக்கிறாய்? என்று திட்டியது. இருபது நாட்கள் கழித்து, அந்த இடத்தை விட்டு கிளம்பியது. உன்னை பார்த்தால் பயமாக இருக்கிறது. சிறுவனாக இருக்கிறாய். இந்த கல்லில் உள்ள விலாசத்திற்கு அப்பன் சந்நிதிக்கு போனால் கடிதம் போடு என்று சொன்னார். நீ சொல்வது எல்லாம் தவறடா என்று குழந்தை கூறியது. நான் ஒரு தவறும் செய்யவில்லையே என்று குழந்தையின் காலை பிடித்து அழுதார்.

நீ ஒரு தவறு செய்யவில்லை. இரண்டு தவறு செய்து இருக்கிறாய் என்று குழந்தை கூறியது. என்னவென்று அவர் கேட்க, குழந்தை முதல் தவறு நீ பனிரெண்டு மணிக்கு பால் வருகிறதா, இல்லையா என்று நினைப்பது முதல் தவறு. காசை கையில் தொடாதவரை, கடிதம் போடு என்று சொல்வது இரண்டாவது தவறு, என்று சொல்லி விட்டு மலைபருவ இடங்களுக்கு குழந்தை சென்றது. மலைபருவத்தில் உட்கார்ந்து இருக்கையில் காட்டு யானைகள் நாற்பது கூச்சலிட்டு சுற்றி நின்றன, இன்றுதான் நான் சாகப்போகிறேன் என்று குழந்தை எண்ணியது. வலதுபுறம் நூறு வயதான பெரியம்மா ஒரு கட்டாரியை கையில் கொடுத்து இந்த காட்டு யானைகளை அடி என்று சொன்னார். நான் சாகத்தான் போகிறேன், நீ ஓடி விடு என்று குழந்தை கூறியது. பெரியம்மா இல்லை நான் உன் காலடியில் தான் இருப்பேன் என்று சொன்னார். காட்டு யானைகளை உற்று பார்த்தால் காட்டு யானைகள் அருகில் காட்டாரியுடன் பெரியம்மா இருப்பது போல் தோன்றியது மீண்டும் பார்க்கையில், பெரியம்மா மாயமாய் மறைந்து விட்டார். காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கூச்சல் போட்டு சுற்றி வந்தது. காட்டு யானைகள் கூச்சல் போடுகிறது என்று சிறிது தூரம் சென்று ஒரு பாறையின் அருகில் போய் குழந்தை உட்கார்ந்தது. அப்பொழுது காண்டாமிருகங்கள் கூட்டம் கூட்டமாக வந்தது. அப்பொழுதுதான் குழந்தைக்கு பயம் வந்தது. நான் இப்பொழுதுதான் சாகப் போகிறேன் என்று நினைத்து கண்களை மூடியது. அப்பொழுது காண்டாமிருகம் குழந்தையின் தலைமேல் நாக்கால் நக்கியது. நக்கி விட்டு போகும் போது பாறையின் மீது தன் பாலை ஈன்றது. குழந்தை கண் திறந்து பார்த்தவுடன், பாறையின் மேல் பால் இருந்ததை பார்த்தது. அப்பொழுது குழந்தைக்கு பசித்ததால் பாலை சாப்பிட்டது.

சில காலம் அந்த காண்டாமிருகம் பால் கொடுத்து வந்தது. சில காலத்திற்கு பிறகு அந்த காண்டாமிருகம் வரவில்லை. ஏன் அது வரவில்லை என்று நினைத்து உற்றுபார்கையில், சகலஜீவன்களின் இடத்திலும் நம் தாய், தந்தை இருக்கிறார்கள் என்று குழந்தை எண்ணியது. சுவாமிகள் அந்த இடத்தை விட்டு உண்ணாமலும் உறங்காமலும் மலைப்பருவத்தை விட்டு கீழே இறங்கினார். குழந்தை இறங்கி வருகையில் ஜனங்கள் பாலும், பழமும் கொண்டு வந்து கொடுத்தார்கள். எனக்கு எதற்கு பாலும், பழமும் என்று குழந்தை திட்டி அடித்தது. மக்கள், உங்களுக்கு பாலும் பழமும் கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லி கதறி அழுதார்கள். அப்பொழுது ஜனங்களை உற்று பார்த்ததும், பார்த்த முகமெல்லாம் வேர்த்த முகமாக பார்க்கப்பட்டது.

வேர்த்த முகமெல்லாம் பூத்த முகமாவது எப்போது என்று குழந்தை கேட்டது. ஏனப்பா நான் நல்லது தான் உண்டாக்கினேன், உன் தாயை கேள் என்று சொன்னார். தாயை பார்த்து, இதை ஏன் என்னை பார்க்க வைத்தாய் என்று கேட்க, அறிவதும் மகனே, புரிவதும் மகனே உன்னிடம் இருப்பது. பின்னே, நீ ஏன் அதை உற்றுபார்க்கிறாய். நீ சென்ற இடமெல்லாம் செல்வம் அப்பா என்று சொன்னார். (இங்கே தாய், தந்தை- பரமசிவனும், பராசக்தியும் ஆவார்கள்). சில காலத்திற்கு பிறகு, பழனியில் புளிய மரத்தின் அடியில் இருக்கும் பாறையின் மேல் குழந்தை படுத்து இருந்தது. சாது மடத்தில் ஐந்தாயிரம் பேருக்கு சாப்பிட அன்னதானம் செய்து கொண்டு ஒருவர் இருந்தார். அவர் குழந்தையை சாப்பிட கூப்பிட்டார். எனக்கு ஏன் சாப்பாடு என்று குழந்தை சாதுக்களை அடித்தது. காலையில் ஆறு கால பூஜை முடித்து, ஒரு DSP ஒரு கடிதம் எழுதினான். குழந்தை, அவனைப் பார்த்து நன்றாக படித்து உள்ளாய். பண்பாடு இல்லாமல் எழுதுகிறாயே என்று கேட்டது. அவன் "என் எழுத்தை பண்பாடு இல்லை என்று யார் சொன்னது" என்று அடிக்க கை ஓங்கினான். பேனாவும் பேப்பரும் கொடுத்து எழுது பார்க்கலாம் என்றான். குழந்தை சோறு போட்டு குழம்பு இல்லாதது போல் இருக்கிறது என்று சொல்லி, அட்டையை கையில் கொடு என்று கேட்டது. அட்டையை கையில் கொடுத்து எழுது என்று சொன்னான். எந்த மொழியில் எழுதுவது என்று குழந்தை கேட்க, ஆங்கிலத்தில் தான் எழுதேன் என்றான். நீ எது வேண்டுமானாலும் சொல், நான் எழுதுவேன் என்று குழந்தை சொல்லியது. அப்படி சொல்லிவிட்டு நாம் தப்பாக எழுதினால், மற்றவர்கள் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணியது.

அப்பொழுது பிறந்த இடத்தின் நினைவு வந்தது. ஜமீன் பேரன் பைத்தியக்காரன் என்று எழுதிவிட்டு, அவன் சொன்ன ஆங்கில வார்த்தையை மூன்று வரி எழுதவும், அவன் அதை பார்த்து விட்டு கை கட்டி நின்றான். அவன் பின்னே அதை பார்த்து விட்டு சாதுக்களும் வந்து நின்றார்கள். ஐந்தாயிரம் பேர்களுக்கு தர்மம் பண்ணப்பட்டவர் எழுந்து பின்புறம் வந்து குழந்தையை பார்த்து அப்பா என்று கதறி அழுதார். என்னை பார்த்து அப்பா என்று யார் கூப்பிடுவது என்று கேட்டது. பின்னர் குழந்தை இடும்பர் மலை மேல் போய் உட்கார்ந்து இருந்தது. அங்கேயும் வந்து பெரியவர்களும் சாதுக்களும் உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று சொல்லி கதறி அழுதார்கள். அப்பொழுது குழந்தை ஹரித்துவார், ரிஷிகேஷம் போகிறேன் என்று சொல்லியது.

என்னை நீ தூக்காதே என்று அந்த பெரியவரை பார்த்து சொல்லியது. அந்த பெரியவர், அண்ணன் மகனை கண்டுவிட்டேன் என்று கார் டிரைவரிடம் சீட்டு எழுதி கொடுத்து அனுப்பினார். நான்கு மணிக்கு குழந்தை எழுந்து போகையில், பெரியவர்களும் சாதுக்களும் உண்ணாமலும் உறங்காமலும் அழுது கொண்டு வந்தார்கள். குழந்தை அனைவரையும் திட்டிவிட்டு, திருச்சி ஆஞ்சநேயர் கோயிலில் சென்று அமர்ந்தது. சுற்றிலும் ஏன் காவல் போட்டு இருக்கிறார்கள் என்று குழந்தை நினைத்தது. கிட்டே போகாதீர்கள் என்று பெரியவர் சொன்னார். பெரியவர் ஆறு மணிக்கு குழந்தை அருகில் வந்து அமர்ந்தார், நீ யாரடா என் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது என்று கேட்டது. நான் தானப்பா உனது சித்தப்பா என்று பெரியவர் சொன்னார். அப்பொழுதுதான் குழந்தைக்கு பிறந்த இடத்தின் நினைவு வந்தது.

"தாய், தந்தை இல்லையே என்று பாலை, மலை, காடு சென்றாயே அண்ணா, யானை கட்டும் கொட்டா எல்லாம் அலமலர்ந்து கிடக்குது, உன் குதிரை கட்டும் கொட்டா எல்லாம் சீரழிந்து கிடக்குது" என்று சித்தப்பாவின் பெண் குழந்தை அழுதது.

உன்னுடைய ஆகாரம் என்று அயிரக்கணக்கானவர்களுக்கு தர்மம் செய்து வந்தார்கள் என்று சொன்னார்கள். எனது என்று சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டு விராலி மலைக்கு சென்றது. அங்கேயும் வந்து உன்னுடைய தர்மம் என்று ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள் என்று சொன்னார்கள். எனது என்று சொல்லாதீர்கள். கடவுளுடையது என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் பச்சைமலை பருவத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் ஊர் ஊராக சென்றார். சென்ற இடமெல்லாம் தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் புரிந்தார். ஏழை ஏளியோரின் பசித்த வயிற்றுக்கு அன்னதானம் வழங்கி அவர்களின் பசியாற பெரும் தொண்டாற்றினார். தம்மை மனதில் நிறுத்தி தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களை போக்கி நல்லாசி வழங்கினார். தன்னிடம் யார் எதை ஆத்மார்த்தமாக கேட்கிறார்களோ அதை வழங்கும் சக்தியும் பெற்றார். பக்தர்கள் அவரை அப்பா! அப்பா! என்று தான் அழைப்பார்கள். ஆனால் சுவாமிகள் தன்னை பைத்தியம் என கூறிக் கொள்வார். இதனால் அப்பா பைத்தியம் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். அவர் அடிக்கடி பீடி புகைத்தபடி இருந்ததால், அவரை பீடி சாமியார் என்றும் அழைத்தனர். அவர் புகைத்து கீழே போட்ட பீடி துண்டுகளை, பக்தர்கள் புனித பொருளாக கருதி பத்திரப்படுத்தினர். தனக்கென மடம் வைத்துக் கொள்பவனும், காசை கையில் தொடுபவனும், ஒரு சீடனை வைத்துக் கொண்டிருப்பவனும், நான், எனது என பேசுபவனும், வாழ்பவனும் உண்மையான சன்னியாசி அல்ல என்ற கொள்கையை கடைசி வரை உறுதியாக சுவாமிகள் கடைபிடித்தார். இதனால் அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சீடன் என்று யாரும் இல்லை. அவரை பொறுத்தவரை அனைவரும் பக்தர்கள் தான்.

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1989ல் விழுப்புரம் பகுதியில் சுற்றித்திரிந்த சுவாமிகளை சில பக்தர்கள் புதுவைக்கு அழைத்து சென்றனர். சுவாமிகள் பல முக்கியஸ்தர்களின் வீடுகளில் தங்கியிருந்தார். அந்த காலத்தில் பலரும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அவ்வப்போது திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், குடியாத்தம், சென்னை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு தங்கியும் பக்தர்களின் குறைகளை தீர்த்தார். 18.11.1999ல் புதுவையிலிருந்து சேலம் வந்து அங்கேயே தங்கி ஆன்மீக சேவைகளில் ஈடுபட்டார். நிறைவாக சுவாமிகள் தனது 141ம் வயதில், சேலம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு மாளிகையில் பிரமாதி ஆண்டு, தை மாதம் 28ம் நாள் 11.2.2000 வெள்ளிக்கிழமை அன்று அஸ்வனி நட்சத்திரத்தில் ஜீவசமாதியானார். அடுத்த ஆண்டு அவரின் சமாதியடைந்ந இடத்தில் கோவில் கட்டப்பட்டு, 11.11.2001ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலின் கருவறையில் அப்பா பைத்தியம் சுவாமிகள் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் ஒரே சன்னதியில் விநாயகர், முருகன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தை சுற்றிலும் சுவற்றில் அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவுருவ படங்கள், பைபரினால் செய்யப்பட்ட அவரின் முழு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையின் வாசலில் ஒரு பக்கத்தில் வள்ளலார் சிலையும், மற்றொரு பக்கம் அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஆன்மீக குருவான அழுக்கு சுவாமிகளின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் 🙏🏻